Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செப்.7ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆகஸ்டு 26, 2022 10:05

புதுடெல்லி: மருத்துவ இளநிலை படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாட்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ல் நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் 497 நகரங்களில் நடந்த நீட் தேர்வை எழுத மொத்தம் 18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். 18 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தது இதுவே முதன்முறை. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் 95% பேர் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 18 நகரங்களில் நடக்கும் தேர்வில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் 31 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் தேர்வு முடிவு வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 25 (நேற்று) தொடங்கவிருந்த பொறியியல் கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ல் வெளியான பின்னர் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் எதிர்கொண்டனர். இதில் 8.70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத தகுதி பெற்றனர்.

இதனால், நீட் தேர்வு முடிவுகளை மருத்துவக் கல்விக் கனவோடு எழுதிய மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்